நாம் அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பதை விட, நாம் நமது வேலையை செய்கிறோமா என்று பார்த்தாலே, பல தேவையற்ற விவகாரங்களைத் தவிர்க்க முடியும். அதுவும் குறிப்பாக சமூக ஊடகங்களில் பலர் தங்கள் வேலையாக கொண்டிருப்பது, அடுத்தவர்கள் ஒழுங்காக இருக்கிறார்களா? அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைத் தான். அவ்வாறு அவர்கள் பார்க்கும் போது, அவர்களுக்கு இரு வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒன்று அவர்களை அவர்களைப் போன்ற மற்றவர்கள் கண்காணிக்கிறார்கள் மற்றும் அவர்கள் மீது முன்பு அபிமானம் வைத்திருந்தவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்கிறார்கள். இவர்களுக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்தது யார? யாருமில்லை. பின்பு ஏன் அவர்கள் அதை எடுத்துக் கொள்கிறார்கள் என்றால், தங்களை மற்றவர்கள் சரியான நபர்கள் என்று சொல்ல வேண்டும் என்று காட்டிக் கொள்ள நினைப்பது தான். உண்மையில், இவர்களை யாரும் சரியான நபர்கள் என்று உள்ளுக்குள் நினைப்பது இல்லை, மாறாக, விவகரமானவர்கள். இவர்களுடன் பழகுவதில் மிகுந்த எச்சரிக்கை வேண்டும் என்று நினைப்பதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் அதை சொல்கிறார்கள். திருவிளையாடல் திரைப்படத்தில் தருமி என்கிற கதாபாத்திரம் சொல்வார்...குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்...அந்த வகையைச் சார்ந்தவர்கள் தான் இவர்கள். உண்மையில் இவர்கள் பேர் வாங்குவதில்லை. பெயரைக் கெடுத்துக் கொள்கிறார்கள். நமது வேலையை சரியாக செய்தாலே போதும். நம்மால் முடிந்த அளவு பிறரின் நல்ல குணங்களை எடுத்துரைத்தாலே போதும், நமக்கு நல்லது நடக்கும். நாம் எதை விதைக்கிறோமோ அதைத் தான் அறுவடை செய்வோம்.